பேரம் பேசியதாக கூறி தேமுதிகவை கேவலப்படுத்துகிறார் வைகோ.... பொன். ராதாகிருஷ்ணன் காட்டம்
சென்னை: தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியிருப்பதை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அத்துடன் பேரம் பேசுகிற கட்சியாக தேமுதிகவை கேவலப்படுத்தியும் இருக்கிறார் வைகோ எனவும் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிகவை வளைப்பதற்காக திமுகவும் பாஜகவும் பேரம் பேசின என குற்றம்சாட்டியிருந்தார்.
இதை திமுக மறுத்துள்ளதுடன் வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸை சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேமுதிகவுடன் எந்த ஒரு பேரத்தையும் பாஜக பேசவில்லை. அப்படி பேரம் பேச வேண்டிய தேவையும் பாஜகவுக்கு இல்லை என்றார்.
மேலும் தம்முடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை பேரம் பேசுகிற கட்சியாக வைகோ பார்க்கிறார் எனில் அவர்களை எப்படி மதிப்பீடு செய்துள்ளார் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். வைகோ தேமுதிகவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.