6 மாதத்திற்குள் மது விலக்கை அமல்படுத்துங்கள்... பொன். ராதா கோரிக்கை
நாகர்கோவில்: மது விலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மது ஒழிப்பு போராட்டத்தின் போது உயிர் இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுவுக்கு எதிராகவும், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் காந்தியவாதி சசிபெருமாள் பல ஆண்டுகள் போராடி சிறைவாசம் அனுபவித்தும், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அவர் கடைசி கட்ட போராட்டத்திற்காக தனது உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்.
எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க அரசு முன்வர வேண்டும். சசிபெருமாளின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்த போது, கோவில், பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று வைத்த கோரிக்கையை கூட அரசு அதிகாரிகள் நிறைவேற்ற முன்வரவில்லை.
6 மாத காலத்திற்குள் தமிழக அரசு மது கொள்கையை குறைக்கவோ அல்லது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பு சசிபெருமாளின் உடல் நல்லடக்கம் செய்ய உதவியாக இருக்கும்.
செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்கும் பணியின் போது அவர் உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் சசிபெருமாளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சசிபெருமாள் தனது கடைசி காலம் வரை போராடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.