உங்கள் உதவி தேவை: திமுக எம்.எல்.ஏ.விடம் பொன்னார் கோரிக்கை
நாகர்கோவில்: தொகுதி வளர்ச்சிக்கு திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர்(நகரும் படிக்கட்டு) அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எஸ்கலேட்டர் அமைக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஓராண்டுக்கு முன்பு தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடியை ஒதுக்கினார்.
இதையடுத்து எஸ்கலேட்டர் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று நடந்த எஸ்கலேட்டர் திறப்பு விழாவில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜனும் கலந்து கொண்டார்.
ராஜன் கலந்து கொண்ட முதல் அரசு நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியில் பேசிய ராஜன் கூறுகையில்,
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி செய்து கொடுக்க வேண்டும், பள்ளிவிளை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அடுத்து பேசிய ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
இந்த தொகுதி மட்டும் அல்ல இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சுரேஷ் ராஜன் மற்றும் அவரை சேர்ந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் ஒத்துழைத்தால் தான் மாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியும். சுரேஷ் ராஜன் தற்போது முன்வைத்த கோரிக்கைகள் 3 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.