தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சா?… கவர்னருடன் பொன். ராதா ஆலோசனை!
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கவர்னர் வித்யாசாகராவை இன்று சந்தித்தார், அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி விவாதித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக நேற்று மாறியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆளுநர் வித்யாசாகர ராவை சந்தித்து விவாதித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள், தடியடி என தமிழகம் வன்முறை களமாக மாறியது.
இந்நிலையில், இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள், அது வன்முறையாக மாறியது மற்றும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ஆளுநருடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.