அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்தார் பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முதல் செய்திக் குறிப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். கண்காணிப்பில் உள்ளார் என்ற இரண்டாவது செய்திக் குறிப்பை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது. முதல்வருக்கு சில தினங்களுக்கு ஓய்வு தேவை என்றும் எனவே மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் ஞாயிறன்று தெரிவித்தனர்.
அவ்வப்போது முதல்வர் நலமாக உள்ளார் என்ற செய்திக் குறிப்புகளையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதனிடையே, ஜெயலலிதா உடல்நலம் குறித்தும் அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார் என்ற பல்வேறு தகவல்கள் பரவினாலும், அதனை அதிமுக மேலிடம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.