பொங்கல் விடுமுறை.. தமிழர்களுக்கு திமுக செய்த இன்னொரு துரோகம்: பொன்.ராதாகிருஷ்ணன் சீற்றம்
பொங்கல் விடுமுறை குறித்து எழுந்த குழப்பங்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிர்ஸ மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சென்னை: சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவரும் திமுக, அதிமுக அரசுகள், மத்தியிலே ஆட்சியில் இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆகியவை தமிழகத்திற்கு செய்துள்ள துரோகங்கள் கணக்கில் அடங்காதவை.
அவர்கள் செய்த தவறுகளை சரி செய்யும் வகையிலே மத்திய அரசு தற்போது மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முன்னேற்றத்திற்காகவும், தமிழ் சமூக முன்னேற்றத்திற்காகவும், அதிக கவனம் கொடுத்து பணி புரிந்து வருகிறார்.
பொய் சொல்கிறார்கள்
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாக மாற்றிவிட முடியும் என்ற கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் பிற கட்சிகள் மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு எதிராக பொய் சொல்லி பரப்பி வருகிறார்கள். அதில் இப்போது வந்துள்ள விஷயம், "பொங்கலுக்கு மத்திய அரசு கொடுத்த விடுமுறை இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது" என்ற பொய்யை நேற்று அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
விடுமுறை விளக்கம்
அரசு விடுமுறைகளை பொறுத்தளவில் மத்திய அரசின் கட்டாய விடுமுறை 14 நாட்கள்தான். குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், இந்த மூன்று விடுமுறை தினங்களோடு சேர்த்து, புத்தர் பிறந்த நாள், ஏசுநாதர் பிறந்த கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, தசரா, தீபாவளி போன்றவை கட்டாயவிடுமுறை தினங்களாகும்.
மதவாரியாக விடுமுறை
கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளவற்றில், தசரா, தீபாவளி ஆகிய இரண்டும் இந்துக்கள் பண்டிகை. இரு நாட்கள் கிறிஸ்தவம், ஒரு நாள் பவுத்தர்களுக்காக, மகா வீரர் ஜெயந்திக்கு ஒருநாள், குருநானக் பிறந்த நாளுக்கு ஒரு நாள் விடுமுறை தரப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான், மொகரம் உட்பட 4 நாட்கள் கட்டாய விடுமுறை தரப்படுகிறது.
3 நாட்கள் கூடுதல்
இதுபோக, 12 பண்டிகைகளுக்கு அகில இந்திய அளவில் பட்டியலிடப்பட்டு இந்த பண்டிகைகளுக்கு விடுமுறை, எந்தெந்த மாநிலங்களில் தேவையோ அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் கொண்ட நலக்குழு கூடி முடிவெடுக்கும். 12 திருவிழாக்களில் 3 பண்டிகைகளை மட்டும் அவர்கள் கட்டாய விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம். இப்பட்டியலில் தசராவுடன் ஏதாவது ஒரு கூடுதல் நாளை எடுத்துக்கொள்ளலாம். ஹோலியன்று விடுமுறை தேவைப்பட்டால் எடுக்கலாம். ஜென்மாஸ்டமி, ராமநவமி, மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகர சங்கராந்தி, பூரி ரத யாத்திரை, ஓணம், பொங்கல், வசந்த பஞ்சமி, விஷு ஆகியவை இப்பட்டியலில் உள்ள ஏனைய பிற பண்டிகைகள்.
இரண்டாவது சனிக்கிழமை
இந்த பண்டிகைகளில்தான் அந்தந்த மாநில ஊழியர் தேவைக்கு ஏற்ப 3 நாட்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பண்டிகைகள் என்று வருகிறதோ அன்றுதான் எடுக்க முடியுமோ தவிற வேறு நாட்களுக்கு மாற்ற முடியாது. அது ஞாயிற்றுக்கிழமை வந்தால் திங்கள்கிழமைக்கு மாற்ற முடியாது. இந்த ஆண்டு 2வது சனிக்கிழமையான 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே அன்று விடுமுறையை எடுத்து ஒருநாளை வீண் செய்ய அரசு ஊழியர் குழு விரும்பவில்லை. எப்படியும் லீவுதானே என்பதால் வேறு ஒருநாள் அந்த லீவை எடுக்க குழு முடிவு செய்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
திமுக-காங்கிரஸ் கூட்டணி
பொங்கலை ஏன் விருப்ப பட்டியலில் கொண்டுவந்தனர் என்று இன்னொரு கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். ஆனால் விருப்ப லீவு பட்டியலில் பொங்கலை கொண்டு வந்துவிட்டது எப்போது தெரியுமா? 2008ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் முறையாக அப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று யார் அரசாங்கத்தில் இருந்தது? திமுக, காங்கிரஸ் கூட்டணி.
துரோகம்
திமுக தமிழர்களுக்கு செய்துள்ள துரோகத்தில் இது ஒரு கூடுதல். இது அவர்கள் செய்த துரோகம், அவர்கள் செய்த தப்பு. இந்த பட்டியலைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவ்வாறுதான் விடுமுறை தினத்தை எடுத்து வருகிறார்கள். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.