நெருங்கி வரும் பொங்கல்- கோலமிடும் புதிய பேனா அறிமுகத்தால் பொதுமக்கள் ஆர்வம்
தூத்துக்குடி: மார்கழி மாதம் மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு புதிய வரவாக கோலமிடும் புதிய பேனா வந்துள்ளது. இதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றுவதில் கோலத்திற்கும் பங்குண்டு. மார்கழி முதல் தை மாதம் வரை வீடுகள் முன்பு பிரமாண்ட கோலமிட்டு சூரிய பகவானை வரவேற்பார்கள்.
தற்போது மார்கழி மாதம் பிறந்துள்ளதாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மஞ்சள், அரக்கு.குங்குமம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலர்களில் கோலப்பொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
100 கிராம் கொண்ட கோலப்பொடி ரூ.5ம், ஒரு படி கோலப்பொடி ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தாமரை, பூக்கள், கும்பம் போன்ற வடிவங்களில் உள்ள அச்சுகள், கோலமிடும் பேனா ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுளளது.
இவைகள் கோவில்பட்டியில் அனைத்து கடைகளிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது ஆற்றுமணல், சுண்ணாம்பு பவுடர், ஆகியவற்றுடன் சாய பவுடரை கலந்து 30க்கும் மேற்பட்ட கலர்களில் கோலப்பொடிகளை தயாரித்து சில்லரையாகவும், மொத்தமாகவும் கடைக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம்.
இந்தாண்டு புதிதாக கோலமிடும் பேனா, தாமரை, மலர்கள், கும்பம் போன்ற கோலமிடும் அச்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்களும், பெண்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றனர். பொங்கல் மற்றும் புத்தாண்டை இப்போதே வரவேற்க பொதுமக்கள் தயாராகி விட்டனர்.