பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெறும் - பொன்.ராதகிருஷ்ணன் உறுதி
திருச்சி: வருகிற பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரியமங்கலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது ஜல்லிகட்டு மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் வருகிற பொங்கலுக்கு ஜல்லிகட்டை நடத்தும் வகையில் காளையோடு சேர்ந்து விளையாடும் வீர விளையாட்டு என்று மாற்றி அதனை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வருகிற பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெறும்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி பணிகளை முடித்துள்ளோம். அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அமைப்பு பணிகளையும் முடிப்போம். பாடகர் கோவன் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று போராடினால் அவருக்கு 75 சதவீத மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.
மழை பாதிப்பு குறித்து தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள். ஏற்கனவே வழங்கிய மழை பாதிப்பு நிவாரண நிதி போக மீதி தொகையும் படிப்படியாக வழங்கப்படும். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை பணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் மூலம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.