பொங்கல் விடுமுறை ரத்து.. இனி தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்க போராடுவதை போலவே, பொங்கல் விடுமுறை நீக்கத்தை ரத்து செய்யவும் மத்திய அரசை, மாநில அரசு அணுக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சென்னை: தமிழர் திருநாள் என உவகையோடு சொல்லும் பொங்கல் திருநாளுக்கு கடந்த 15 வருடங்களாகவே கட்டாய விடுமுறை கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளார் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ். உண்மை அதுதான். ஆனால் இப்போது விடுமுறை பட்டியல் வெளியான நிலையில் பொங்கல் பண்டிகை குறித்து யாரோ ஒரு தொலைக்காட்சி நிருபர் பார்த்து அதை பிரேக்கிங் செய்தியாக்க, இந்த ஆண்டு முதல்தான் பொங்கல்விடுமுறை ரத்தாகிவிட்டது என பொங்கி தீர்த்துவிட்டனர் தமிழ் நெட்டிசன்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த வருடம் பொங்கல் பண்டிகையை திடீரென பட்டியலில் இருந்து நீக்கியிருந்தால் ஏற்பட்டிருக்கும் வடுவைவிட, 15 வருடமாக இப்படித்தான் இருந்தது என்ற உண்மை இன்னும் கூடுதலாகவே கசக்கிறது.
வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு உண்டு. ஏனெனின் அது தமிழர் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. ஓணம் மலையாள பண்டிகை எனப்படுவதில்லை. ஹோலி ஹிந்தி பண்டிகை என அழைக்கப்படுவதில்லை. இந்திய மாநிலங்களிலேயே, தாய் மொழியை பெயராக கொண்ட ஒரே மாநிலம் 'தமிழ்நாடு' என்பதை போலவே, பண்டிகைகளில் தமிழர் திருநாள் என்ற அடைமொழி பெற்றது பொங்கல் பண்டிகை.
மதசார்பற்ற விழா
பொங்கல் என்பது மதங்களை கடந்து நடைபெறும் ஒரு தமிழர் பெரு விழா. படையல் வைப்பதற்கு மத நம்பிக்கை அனுமதிக்காவிட்டாலும், பொங்கலை பொங்கி அதை பகிர்ந்துண்டு சாப்பிடும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழகம் முழுக்க பெருமளவில் பார்க்க முடியும்.
பன்னெடுங்கால பழக்கம்
ஐம்பெரும் நிலங்களாக தமிழர்கள் பிரித்துக் கொண்டு அதில் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே முன்னிறுத்தினர். எனவே ஆதி காலம் தொட்டே புத்தரிசியை பொங்கலாக பொங்கி, கடவுளுக்கும், சூரிய பகவானுக்கும் படைத்து வழிபடுவது தமிழர்களின் பன்னெடுங்கால வழக்கம்.
புதிய பண்டிகைகள்
புராண, இதிகாசங்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகள் நாளடைவில் தமிழர் கலாசாரத்தின் அங்கமாகின. இவை வட இந்திய மக்களிடமிருந்து தமிழகத்திற்குள் வந்த பண்டிகைகள் எனவும் சொல்லலாம். ஏனெனில் மேற்கண்ட பண்டிகைகளுக்கு சங்க இலக்கியங்களில் ஆதாரம் இல்லை. ஆனால் பன்முகம் கொண்ட இந்திய சமூகத்தில் வாழும் தமிழ் மக்களும் இந்த பண்டிகைகளுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ஆனால் இதற்கும் முன்பிருந்தே கொண்டாடப்படுவது பொங்கல்.
இப்படி செய்யலாமா
இதை கடந்த 15 வருடங்களாக கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து விலக்கி வைத்துள்ளது உண்மையிலேயே கொடுஞ்செயல். ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்க போராடுவதை போலவே, பொங்கல் விடுமுறை நீக்கத்தை ரத்து செய்யவும் மத்திய அரசை, மாநில அரசு அணுக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் நெருக்கடி
மத்திய அரசு அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிரச்சினையின்றி விடுமுறை கிடைக்க மட்டுமல்லாது, தமிழ் விழா இந்தியா முழுக்க பிரபலமாக இந்த கட்டாய விடுமுறை அறிவிப்பு உதவும். இத்தனை நாட்களாக கண்ணை மூடிக்கொண்டு தெரியாததை போல இருந்த கட்சிகள், இனியாவது விழித்து தொடர் அழுத்தம் மூலமாக இக்கோரிக்கையை நிறைவேற்றி திராவிட இனத்தின் மூத்த தொல் குடிமக்களின் விழாவுக்கான உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
ஏற்குமா பாஜக
அதேநேரம், பொங்கல் என்பது புராணத்துடன் தொடர்பில்லாத பண்டிகையாக உள்ளது. சுறுங்க சொன்னால் வேத பண்டிகை இல்லை. பொங்கல் பண்டிகையில் கடவுளுக்கு வேலையுள்ள போதிலும், இதிகாச கதைகளுக்கு வேலையில்லை. எனவே, மத்திய பாஜக அரசு இக்கோரிக்கையை எளிதில் ஏற்காது. அதை ஏற்க வைப்பது தமிழக அரசியல் வாதிகள் கையில்தான் உள்ளது.