திருக்கோவிலூரில் பொன்முடிக்கு அமோக வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வெற்றி வாய்ப்புள்ள நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இந்த முறை திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கு காரணம் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் பொன்முடி வெற்றிக்கு மிக கடுமையான நெருக்கடி இருக்கும் என்பதாலே அவர் தொகுதி மாறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்குள்தான் இவரது சொந்த ஊர் வருகிறது என்பதும் இவர் தொகுதி மாறி வர முக்கியக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.
அதன்படி நேற்று வெளியான வடக்கு மண்டலத்திற்குட்பட்ட திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது அந்த கருத்துக்கணிப்பு. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த பொன்முடி சமீபத்தில் விடுதலையானர்.
நியூஸ் 7 மற்றும் தினமலர் கருத்துக்கணிப்பின்படி,இந்த தொகுதியில் திமுகவுக்கு 47.7 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 27.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் பாமகவுக்கு 11.5 சதவீத ஆதரவு உள்ளது. ம.ந.கூட்டணிக்கு 6.2 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.