தபால் நிலையங்களில் செல்போன், ஃப்ரிட்ஜ் விற்பனை படுஜோர்...
சென்னை: தமிழக தபால் நிலையங்களில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த விலை செல்போன் விற்பனை திட்டத்துக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில வாரங்களிலேயே 5 ஆயிரம் செல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாம்ப், கவர், கார்டு என விற்பனை செய்து வந்த தபால் நிலையங்களில் தற்போது வாட்ச், ஃப்ரிட்ஜ், செல்போன்கள் விற்பனை செய்வதால் தற்போது எந்நேரமும் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது.
400 தபால் நிலையங்களில்
தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைமை தபால் நிலையங்கள், முக்கிய தபால் நிலையங்கள் என சுமார் 400 இடங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் செல்போன் விற்பனையை தமிழக அஞ்சல்துறை தொடங்கியது. அதற்கு, பொது மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
5000 செல்போன்கள் விற்பனை
தபால் நிலையங்களில் செல்போன் விற்பனை தொடங்கியது முதலே அவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மாதம் ஆவதற்குள்ளாகவே, 4,800க்கும் அதிகமான செல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவியும் கூட்டம்
ஸ்டாம்ப், கவர் வாங்க மட்டுமே தபால்நிலையங்கள் பக்கம் எட்டிப்பார்த்த மக்கள் தற்போது செல்போன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனராம். நாடு முழுவதும் பரவலாக இந்த செல்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனத்தால் அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விலைகுறைவு, ஃப்ரி டாக்டைம்
அந்த செல்போன்களின் விலை குறைவு (ரூ.1999) என்பதாலும், அதில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்', 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்' உடன் தரப்படுவதாலும் அதை அனைவரும் விரும்பி வாங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரமான செல்போன்கள்
இதுபோன்ற, தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்றுத் தருகிறோம். அதற்கான கமிஷன் தொகையை அந்நிறுவனங்கள் தருகின்றன. தரமான நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். விருப்பமுள்ளோர், அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடையில் சூடுபிடித்த விற்பனை
இதேபோல, தபால் நிலையங்களில் விற்கப்படும் சிறிய (9 கிலோ) ‘சோட்டுக்கூல்‘ ஃபிரிட்ஜ்களின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. பெட்டிக் கடைக்காரர்கள், ஒரே வீ்ட்டைப் பகிர்ந்து வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவியர், இளம் சாப்ட்வேர் துறையினர் போன்றோர் அதனை விரும்பி வாங்குகின்றனர். மேலும், இன்வர்ட்டர் மூலமாகவும் அதை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இவை பல்வேறு வண்ணங்களில் ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். சூரியமின்சக்தி விளக்குகளும் ரூ.500 முதல் விற்கப்படுகின்றன.
கல்லூரி புத்தகங்கள்
இதுதவிர, அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாண வர்களின் புத்தகங்களை ‘பேக்' செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காக, சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.