கடவுளே கடவுளே.. கட்சி கலரையே மறந்துட்டாங்களே இந்த அதிமுக காரங்க!
மதுரையில் முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக கலரில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மதுரை : அதிமுகவில் அதிகார மோதல்கள் காரணமாக 3 அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சிகாரர்களுக்கு கட்சிக் கொடியின் நிறம் கூடத் தெரியாது என்பது அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களே அம்பலப்படுத்துகின்றன.
அதிமுகவில் கோஷ்டிகளுக்கு பஞ்சம் இல்லாமல் முதல்வர் எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன. அதிகாரப் போட்டியால் கட்சியின் பலம் குறைந்து வருவதாக தொண்டர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை ஜெயலலிதா 30 ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்தார். அவர் இல்லாததால் அதிமுகவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி நடந்த சண்டையில் கட்சியின் எதிர்கால்லம் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் மதுரையில் புறநகர் மாவட்ட அஇஅதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், உலகத் தமிழ் சங்க வளாகத்தில் நூலகம், பொதப்பணித்துறை, சட்டக்கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடம் உள்ளிட்ட வகதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சட்டசபையில் 110விதியின் கீழ் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது வழக்கமான நிகழ்வு தான் என்றாலும் அதிமுகவினர் கோட்டை விட்ட ஒரு விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருக்கும் மேயர் ராஜன் செல்லப்பாவிற்கும் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
போஸ்டரில் அனைவரின் பெயரும் கருப்பு, சிவப்பு என்று திமுகவின் கட்சிக் கொடி நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அதிமுக கட்சிக் கொடியின் நிறம் கருப்பு, வெள்ளை, சிவப்பு என்பது கூடவா தெரியாமல் போஸ்டர் அடித்தார்கள், இந்த நிலைமையில் தான் கட்சி இருக்கிறது என்று தொண்டர்கள் புலம்பிச் சென்றனர்.