கரண்ட்டுக்கு தொடரும் சோதனை... தூத்துக்குடி 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்சார நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் மின்வெட்டுப் பிரச்சினை தலை தூக்கி நிற்க ஆரம்பித்துள்ளது. வழக்கம் போல எங்க ஊர்ல இத்தனை மணி நேரம் கரண்ட் கட், உங்க ஊர்ல என்று மக்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் இருக்கும் மின் நிலையங்களும் புட்டுக்க ஆரம்பித்துள்ளதால் மின் விநியோகம் மீண்டும் மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியின் துயரக் கதை
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் மூன்று யூனிட்கள் மிகவும் பழமையானவை. இவை நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை மீறி செயல்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.
5 தடவைக்கு மேல் பழுது
இந்த மாதத்தில் மட்டும் குறைந்தது 5 தடவைக்கும் மேல் பழுதானது. இதனால் இதனை சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை சீரமைக்க ரூ.226 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக பழுதின் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்க மின் வாரியம் இதற்கு ரூ.6 கோடி ஓதுக்கியுள்ளது.
தற்காலிகமாக சீரமைப்பு
இதனை அடுத்து 3வது யூனிட்டை பராமரித்து தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பான பணி துவங்கியுள்ளது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.
விரைவில் முடித்தால்தான் மீண்டும் உற்பத்தி
பணிகளை விரைவில் முடிந்து மீண்டும் மின்சார உற்பத்தியை துவங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணிகள் முடிய 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
45 நாள் கரண்ட் காலி
இதனால் இந்த யூனிட்டில் உற்பத்தியாகும் 210 மெகா வாட் மின்சாரம் 45 நாட்களுக்கு கிடைக்காது. தற்போது தமிழகத்தில் சில இடங்களில் குறைந்தது 3 மணி நேரம் மின்தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஊர்களில் பல மணி நேரம்
அதேசமயம், கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் தடைப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.