மின்பற்றாக்குறை குறைந்து விட்டது... ஓ.பி.எஸ். தரும் "ஸ்வீட் ஷாக்"!
சென்னை: தமிழ்நாட்டில் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
விவசாயம் :
விவசாயத்துறைக்கு ஜெயலலிதா அரசு மிகுந்த முன்னுரிமையினை அளித்ததன் பயனாக 2010-11-ல் 75.95 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 2014-15-ல் 122.86 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறையின் பொருளாதார வளர்ச்சி வீதமும் 2013-14, 2014-15-ம் ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறைக்கு 2010-11-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 2,072.43 கோடி ரூபாய்தான். ஆனால் இத்துறைக்கான 2015-16-ம் ஆண்டின் ஒதுக்கீடு 6,613.68 கோடி ரூபாய் ஆகும்.
ஜெயலலிதாவின் அரசு கடந்த 4 ஆண்டுகளாக விவசாய சாகுபடி பரப்பளவையும், உற்பத்தித் திறனையும், விவசாயிகளின் வருவாயினையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு :
வேலைவாய்ப்பைப் பெருக்க, தொழில் துறையை ஜெயலலிதா அரசு சிறப்பாக ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்திட, மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தை, செயல்படுத்த ஜெயலலிதா அரசு, முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களின் மாநாட்டை, மே 23-24-ல் நடத்த ஜெயலலிதா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெரும் தொழில்களுக்கும், சிறு குறு தொழில்களுக்கும் திட்ட அனுமதிகளை எளிமைப்படுத்த, தனித்தனியே ஒற்றை சாளர இணையதளங்கள் 2015-16-ல் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் இத்தகைய பயிற்சிகளை 2 லட்சம் நபர்களுக்கு அளிப்பதற்கு ஜெயலலிதா அரசு இலக்கிட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாடு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 100 கோடி ரூபாய் 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறை :
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றபோது மின்பற்றாக்குறை எவ்வாறு இருந்தது என்பதையும், அதன் பிறகு எவ்வாறு அது சரி செய்யப்பட்டு வருகிறது என்பதையும், அதனால் எந்த அளவிற்கு மின் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
குறைந்துள்ளது :
2011-ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பொழுது மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் ஆனால் மின் வழங்கல் திறன் 8 ஆயிரம் மெகாவாட்டாக மட்டுமே இருந்தது. மின் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. தற்போது தமிழ்நாட்டின் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இதில் இருந்து எந்த அளவுக்கு மின் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.