கோவையில் தந்தை–மகள் எரித்துக் கொலை: விசைத்தறி அதிபர் உள்பட 5 பேர் கைது
கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தந்தை மகள் இருவரும் தனித்தனியே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.50000 பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போன்று திருப்பூர் மங்கலம் பகுதியில் ஓர் ஆணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரித்ததில் இவர்கள் இருவரும் தங்கவேல், மகாலட்சுமி என்பதும், மகாலட்சுமி தங்கவேலின் மகள் என்பதும் தெரிய வந்தது.
பல்லடம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் வயது,45 இவரது மனைவி தமிழ் செல்வி,37. இவர்களுக்கு மகாலட்சுமி,11, தர்ஷன்,4 ஆகிய குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
தங்கவேல் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பல்லடம் ராசாக்கவுண்டன்பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது விசைத்தறி கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர் முன்பணமாக செல்வராஜிடம் ரூ.60 ஆயிரம் வாங்கி உள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்கவேல் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக அவரது கை எந்திரத்தில் சிக்கி விரல்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கவேல், செல்வராஜிடம் நஷ்டஈடு கேட்டார். ஆனால் செல்வராஜ் எந்த பண உதவியும் செய்யவில்லை.
இதையடுத்து தங்கவேல் அங்கு வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு வேறு விசைத்தறி கூடத்தில் சேர்ந்தார். இதன் பின்னர் செல்வராஜ், தங்கவேலை பார்க்கும் போதெல்லாம் ‘என்னிடம் வாங்கிய முன்பணம் ரூ.60 ஆயிரத்தை திருப்பிக் கொடு என கேட்டு தகராறு செய்தார்.
இந்த விவகாரம் பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு சென்றது. அங்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கவேல் முதற்கட்டமாக ரூ.6 ஆயிரத்தை செல்வராஜிடம் கொடுத்தார். மீதி பணத்தை படிப்படியாக தந்து விடுவதாக கூறினார். ஆனால் தங்கவேல் கூறியபடி தவணைத் தொகையை கொடுக்கவில்லை என தெரிகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் மீண்டும் தங்கவேலிடம் பணத்தைக் கேட்டார். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் திங்கட்கிழமையன்று மாலையில் தங்கவேல் தனது மகள் மகாலட்சுமியை அழைத்துக் கொண்டு நோட்டுகள் வாங்குவதற்காக பல்லடத்துக்கு தனது இருசக்கசர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் தங்கவேலின் மீது மோதியது.
உடனே காரில் இருந்து இறங்கிய கும்பல் தங்கவேல், மகாலட்சுமி ஆகியோரை கடத்திச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் சத்தம் போடவே காரில் வந்த கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்தது. இதுபற்றி தகவலறிந்த தமிழ்செல்வி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் மாணிக்காபுரம் சாலை வேலம்பாளையத்தில் நேற்று காலை எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. சம்பவ இடத்துக்கு மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டது பல்லடத்தில் கடத்தப்பட்ட தங்கவேல் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தமிழ்செல்வியை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர் இறந்து கிடப்பது தங்கவேல் என்பதை உறுதிபடுத்தினார். இதனால் அவருடன் சென்ற மகள் மகாலெட்சுமி எங்கே? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் ஒரு சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிறுமி பல்லடத்தில் கடத்தப்பட்ட மகாலட்சுமி என்பது தெரிய வந்தது. போலீசார் தமிழ்செல்வியை கோவைக்கு வரவழைத்தனர். மகளின் உடலைப் பார்த்து தமிழ்செல்வி கதறி அழுதார். இதற்கிடையே, பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி விசைத்தறி அதிபர் செல்வராஜை கைது செய்தனர். அவர் தனக்கு தர வேண்டிய முன்பண தகராறில் ஆத்திரமடைந்து தங்கவேலையும், அவரது மகளையும் கடத்தி எரித்துக் கொன்றதாக கூறினார்.
கொலை நடந்தது எப்படி
இந்த கொலைகள் தொடர்பாக செல்வராஜின் கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கவேலையும், மகாலெட்சுமியையும் காரில் கடத்தி தாக்கி உள்ளனர். இதில் மகாலெட்சுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் கும்பல் தங்கவேலை எரித்துக் கொலை செய்துள்ளனர். உடனே செல்வராஜின் கூட்டாளிகள் காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர். மகாலட்சுமியை உயிரோடு விட்டால் தங்களை போலீசில் அடையாளம் காட்டிக் கொடுத்து விடுவாள் என கருதிய செல்வராஜ் கோவை வடவள்ளியில் உள்ள தனது உறவினர் ரங்கராஜூக்கு,36 போன் செய்து நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். உடனே அவர் மகாலட்சுமியையும் எரித்துக் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து விடுமாறு கூறினார். அதன்படி செல்வராஜ், மகாலட்சுமியை காரில் ஏற்றி வடவள்ளியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு போய் எரித்து கொலை செய்து உடலை வீசிச் சென்றது தெரிய வந்தது.
5 பேர் கைது
விசைத்தறி அதிபர் செல்வராஜ் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவான ரங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும், தங்கவேலின் மொபட்டை கொலையாளிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசி உள்ளனர். அதை வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்செல்வி புகார்
இதனிடையே கணவர் மற்றும் மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட தற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்று மனைவி புகார் தெரிவித்துள்ளார். கணவரையும், மகளையும் கடத்திச் சென்றதாக தகவல் கிடைத்த உடனேயே பல்லடம் போலீஸில் புகார் அளித்தோம். ஆனால் அதை பதிவு செய்யாமல் அலைக்கழித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நேரடியாக புகார் தெரிவிக்க முயற்சித்ததால், நீண்ட நேரத்துக்குப் பிறகு புகாரைப் பெற்றுக் கொண்டனர். 7 மணிக்கு கடத்தல் சம்பவம் நடந்தது. இதையடுத்து தகவல் தெரிந்து காவல்நிலையம் சென்றபோது இரவு மணி 8.45. ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாகவே புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்டு உடனடியாக உஷார்படுத்தியிருந்தால் இருவரையும் காப்பாற்றியிருக்கலாம் என கதறினார்.
காவல்துறை மறுப்பு
இக்குற்றச்சாட்டு குறித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சங்கர் கூறும்போது, ‘இந்தக் குற்றச் சாட்டு முற்றிலும் தவறானது. இரவு 10 மணிக்குத்தான் போலீஸாரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. உடனடியாக வழக்கை பதிவு செய்து சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையப்பன், சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்கு அவரது மனைவி மட்டுமே இருந்தார். மீண்டும் இரவு ஒரு மணிக்கு ஆய்வு செய்தபோது சந்தேகப்படும் நபர் பிடிபட்டார் என்று கூறியுள்ளார்.