படித்தவர், படிக்காதவர் என பாரபட்சமே இல்லாமல் காசு வாங்கி விட்டனர்.. பிரேமலதா அதிரடி "அட்டாக்"!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலி்ல படித்தவர், படிக்காதவர் என அனைவருமே காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போட்டனர். இதனால்தான் நாங்கள் தோற்க நேரிட்டது. நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட எங்களுக்கு மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகா்த் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பிறகு தேமுதிக சத்தமே இல்லாமல் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறத் தொடங்கினர்.. இன்னும் நிற்காமல் அது தொடர்கிறது.
இந்தகத் தேர்தல் படு தோல்விக்கு பிரேமலதாவும், வைகோவும்தான் முக்கியக் காரணம் என்பது விலகியவர்கள் கூறும் முக்கியப் புகாராக உள்ளது. இந்த நிலையில பிரேமலதா முதல் முறையாக மனம் திறந்து விரிவான பேட்டி ஒன்றை வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பண பலம் வீழ்த்தி விட்டது
சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பண பலமும் அதிகார பலமும்தான் எங்களோட தோல்விக்குக் காரணம். படிச்சவங்க- படிக்காதவங்க எல்லோருமே பணம் வாங்கிட்டு ஓட்டுப் போட்டிருக்காங்க. மக்களையும் ஊழல் வாதிங்களாக்கிட்டாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுக்காம மக்களுக்கு நல்லது செய்யணும்னு நேர்மையா தேர்தலை எதிர்கொண்ட எங்களுக்கு மக்கள் கொடுத்த பரிசுதான் தோல்வி. அது மட்டுமல்ல. பா.ம.க., சீமான்னு ஆளாளுக்கு முதல்வர் வேட்பாளர்களாக நின்று ஓட்டுக்களை பிரியவச்சாங்க.
வைகோ காரணம் இல்லையா?
கேள்வி: உங்கள் கூட்டணியில் உள்ள வைகோ திடீர் திடீர் என்று சர்ச்சையில் சிக்கியதும் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியதும் கூட உங்கள் தோல்விக்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?
பதில்: இது எல்லாமே வைகோவின் தனிப்பட்ட விஷயம். தேர்தல் சமயத்தில் எல்லோருமே ஒற்றுமையாகத்தான் இருந்தோம். கடைசி நேரத்தில் திடீரென்று போட்டியிட மாட்டேன் என்று வாபஸ் வாங்கியது அதிர்ச்சியளித்தது. உங்க முடிவை மாத்திக்கோங்கன்னு விஜயகாந்த் கூட சொல்லிப் பார்த்தாரு. அவர் கேட்கவில்லை.
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கிறோம்
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டிக்கு என்ன காரணம்?
பதில்:- மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகிட்டோம்னு யார் சொன்னா? இன்னும் தலைவர் விஜயகாந்த் அப்படியொரு முடிவை எடுக்கல. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அவரும் தொண்டர்களும் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. உறுதியானது.
எங்களால்தான் திமுக தோற்றது
கேள்வி: சட்டசபைத் தேர்தலில் திமுக பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் ஜெயித்திருக்கலாம்னு இப்பவாது நினைக்கிறீங்களா?
பதில்: நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே திமுக, அதிமுக. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வரணும் என்கிறதுதான். 2011-ல் அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகி மக்களின் எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊழல் ஆட்சியை மறுபடியும் வராம தடுக்கத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். நாங்க மட்டும் 2011 தேர்தலில் கூட்டணி வைக்கலன்னா ஜெயலலிதா ஜெயிச்சிருக்கவே முடியாது. தற்போதும் நாங்கள் திமுக.வுடன் கூட்டணி வைக்காததால்தான் திமுக தோற்றது.
இதெல்லாம் ஒரு பலமா?
கேள்வி: திமுக பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பது பற்றி?
பதில்: ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் ஜெயித்து என்ன சாதிச்சுட்டாங்க? அது தான் திமுகவின் நிலைமையும்.
பாமக ஒரு பொருட்டே அல்ல
கேள்வி: ராமதாசும், அன்புமணியும் தொடர்ந்து தேமுதிகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்களே?
பதில்: ராமதாசும் அவரோட மகன் அன்புமணியும் எங்களோட பலத்தைப் பார்த்துப் பயப்படுறாங்க. அவங்க கட்சியை விட எங்க கட்சியைப் பற்றித் தான் நாள் முழுக்க பேசிட்டிக்கிட்டிருக்காங்க. ஆனா, நாங்க அவங்களை எதுவுமே விமர்சிக்கிறது கிடையாது. அவங்கள் எல்லாம் எங்களுக்கு போட்டியே கிடையாது. எங்களோட போட்டியே அதிமுக - திமுகதான். மத்தவங்க எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
மோடி நல்லா பேசுறாரு!
கேள்வி: மோடியின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி இருக்கு?
பதில்:- நல்லா பேசுறாரு... நிறைய சொல்றாரு... ஆனா, செயல்பாடுகள்தான் குறைவா இருக்கு. உலகம் முழுக்க பயணம் போறது நல்லதுதான். ஆனா, செயல்பாடு வேண்டுமே... சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவது, அனைவருக்கும் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தது போன்றவற்றைத் தவிர பெருசா எதுவும் பண்ணல.
தேமுதிக அழிந்ததா?
கேள்வி: தேமுதிக அழிந்தது, மீண்டு வர முடியாது என்கிறார்களே?
பதில்:- தே.மு.தி.க.வின் பலம் என்னன்னு எங்களுக்குத் தெரியும். அதை எப்படி கொண்டு செல்லணும்னும் தெரியும். எங்க கட்சி அழிந்து போகணும்னு நினைக்கிறவங்கதான். அப்படிச் சொல்றாங்க. வெற்றி - தோல்வி என்பது தமிழக அரசியல் வரலாற்றில் சகஜமான ஒன்று.
சுயநலமிகள்
கேள்வி: உங்க கட்சியில் இருந்து நிறைய பேர் பிரிந்து போய்க்கிட்டே இருக்காங்களே....
பதில்: தங்களோட சுய நலத்துக்காக போறவங்களால எங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. முன்னாடி 9 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுனாங்க. அப்பவும் உறுதியாத்தான் இருந்தோம். அதைவிட, இப்போ உறுதியாக இருக்கோம்.
பெத்த தாய் தந்தைக்கு துரோகம் செய்த சந்திரகுமார்
சந்திரகுமாருக்கு முதன் முதலில் சட்டசபை உறுப்பினர் என்ற அடையாளத்தைக் கொடுத்தது யாரு, பெத்த அம்மா, அப்பாவுக்குச் செய்யும் துரோகத்தை அவர் பண்ணிட்டுப் போயிட்டாரு. ஒருத்தர் போனா, ஆயிரம் உறுப்பினர்கள் தேமுதிகவில் முளைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. தேமுதிக சுயம்புவாக உருவான கட்சி. எந்தக் கட்சியிலிருந்தும் பிரிந்து வரல. யாராலும் இதை அழிக்க முடியாது.
திமுகவுக்குப் போகாததற்கு இதுதான் காரணம்
கேள்வி: மிகப்பெரிய கட்சியான திமுக கடைசி வரை உங்களை கூட்டணிக்கு அழைச்சிக்கிட்டே இருந்தாங்க. கூட்டணிக்குப் போகாததுக்கு காரணம் என்ன? உங்களோட முடிவாலதான் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது என்று தகவல் பரவியதே?
பதில்:- மறுபடியும் சொல்றேன். மாற்று அணி ஆட்சியை பிடிக்கணும்னுதான் திமுகவுக்கு போகல.
விஜயகாந்த்தை நான் கட்டுப்படுத்தவில்லை
கேள்வி: விஜயகாந்தை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்கிறார்களே. அது எந்த அளவுக்கு உண்மை?
பதில்: இது 100 சதவீதம் தவறான கருத்து. 2005-ம் ஆண்டு நாங்க கட்சி ஆரம்பித்ததில் இருந்து இப்படியொரு தவறான கருத்தை தி.மு.க.தான் பரப்பிக்கிட்டிருக்கு. இந்தக் கட்சி விஜயகாந்த்துக்கு உடையது. லட்சக்கணக்கான தொண்டர்களுடையது. எந்த முடிவையும் தொண்டர்களுடைய கருத்து அறிந்துதான் விஜயகாந்த் எடுப்பார். தொண்டர்கள்தான் எங்களுடைய குடும்பம். தாய்க்குப்பின் தாரம்னு சொல்வாங்க. அந்த வகையில் மத்தவங்ககிட்ட கருத்து கேட்கிற மாதிரி என்கிட்டயும் கேட்பார். படம் பார்க்கும்போதும் டிரைவர், வாட்ச்மேன், சமையல்காரங்க எல்லோரையும் பார்த்து, ஏம்பா, எம் படம் எப்படியிருக்குன்னு கேட்பாரு. எல்லார் கருத்தையும் கேட்டுட்டு இறுதி முடிவை விஜயகாந்த் தான் எடுப்பாரு. அவரோட முடிவில் நான் உட்பட யாருமே தலையிட முடியாது.
கண்டுக்கறதே இல்லை
கேள்வி: சமூக வலைத்தளங்களில் விஜயகாந்தைப் பற்றி நிறைய பரப்புகிறார்கள்... அதைப் பார்ப்பீங்களா?
பதில்: நாங்க அதையெல்லாம் கண்டுக்கிறதில்ல. சும்மா டைம் பாசுக்காகவும், பேமஸ் ஆகணும்ங்கிறதுக்காகவும் அப்படிப் பரப்புறாங்க. இப்படி பேஸ்புக், வாட்ஸ்-அப்ன்னு பரப்புறவங்க எத்தனை பேரு ஓட்டுப்போட போனாங்க என்று கூறியுள்ளார் பிரேமலதா.