ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் பிற கட்சியினரை வளைக்கும் மு.க. ஸ்டாலின்... பிரேமலதா சாடல்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் மாற்று கட்சியினரை வளைத்து வருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டையே பறிகொடுத்தார். தற்போது தேமுதிகவின் முரசு சின்னமும் பறிபோய்விட்டது.
இத்தனை படுதோல்விக்கும் காரணமே விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் என அக்கட்சியில் இருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வரும் மாவட்ட செயலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது கட்சியில் இருக்கும் மாவட்ட செயலர்களும் தாங்கள் தொண்டர்களாக மட்டுமே இருந்துவிடுகிறோம். பொறுப்புகளில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவுக்கு அச்சம்
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை பிரேமலதா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேமுதிகவைக் கண்டு அதிமுகவுக்கு கடுமையான அச்சம் ஏற்பட்டுள்ளது.
விரக்தியில் ஸ்டாலின்
ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் இருக்கிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இதனால்தான் மாற்று கட்சியினரை அவர் வளைத்துப் போடுகிறார்.
விஜயகாந்த் அறிவிப்பார்
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். நிச்சயம் உரிய நேரத்தில் விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிடுவார்.
மக்கள் மாற வேண்டும்...
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் மாறினால்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இது மக்களின் கைகளில்தான் உள்ளது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.