தேமுதிக பொதுச் செயலாளராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?
விரைவில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விரைவில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகமே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. சமீபத்தில் அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி அனைத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் தேமுதிக தலைமை நிலையம் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். ஆகையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். விஜயகாந்திற்கு வழக்கமான பரிசோதனையே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினாலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் தனது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து இடைத்தேர்தல் பிரசாரத்தை கவனிக்கும் பொறுப்பு பிரேமலதா விஜயகாந்திடம் வந்துள்ளது.
மேலும் தற்போது உள்ள சூழலில் கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதனால் அடுத்த மாதம் முதல்வாரத்தில் மாவட்ட, ஒன்றிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் ஒரு மாநகரத்தில் தே.மு.தி.க. பொதுகுழு கூடி பிரேமலதாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.