அதிமுக நாடாளுமன்றத்தை முடக்கலாம், ஆனால் சட்டசபையில் தேமுதிகவை நீக்குவாங்க.. பிரேமலதா பாய்ச்சல்
கோவை: நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு சபையை முடக்குவார்கள். ஆனால் தமிழக சட்டசபையில் மட்டும் எதிர்க்கட்சிகள் எந்தக் கேள்வியையும் கேட்டு விடக் கூடாது. அப்படியே கேட்டால் சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்வார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோவை ராமநாதபுரத்தில் தேமுதிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் தையலகத்தை நேற்று பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
110 விதியின் கீழ்
110 விதியின் கீழ் ஜெயலலிதா பல ஆயிரம் கோடிக்கு அறிவிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறாரே ஒழிய எந்த திட்டமும் செயல்முறைக்கு வந்ததாக தெரியவில்லை.
வெறும் கண்துடைப்பு மாநாடு
உலக முதலீட்டாளர் மாநாட்டை தேமுதிக என்றுமே வரவேற்கிறது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஜெயலலிதா எதுவும் செய்யாமல் ஆட்சி முடியும் நேரத்தில் கண்துடைப்பு நாடகம் போல உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள் என்பது தான் எங்கள் கருத்து.
கோவையில் நசிந்து போன தொழில்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லப்பட்ட கோவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகவும் நசிவடைந்து வருகின்றன. நெசவு தொழில் நசுக்கப்பட்டு விட்டது. மின்சார தட்டுப்பாடு உள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது வெறும் கண்துடைப்பு. அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பது தான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு.
பிற மொழிகள் தேவைப்பட்டால் கற்றுக் கொள்ளலாம்
விஜயகாந்த் கூறியது போல தமிழ்மொழி நம் தாய் மொழி. எப்போது நமக்கு மற்ற மொழிகள் தேவைப்படுகிறதோ அப்போது அந்த மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.
மாறி மாறி பழி போடாதீர்கள்
தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் வர வேண்டும். ஆனால் அந்த திட்டங்கள் நிறைவேறாதபட்சத்தில் மத்திய அரசை கேட்டால் மாநில அரசு மீதும், மாநில அரசை கேட்டால் மத்திய அரசு மீதும் பழியை போடக்கூடாது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. தொகுதி என்றால் அதற்கு மாநில அரசு உதவி செய்வது கிடையாது. இதுபற்றி சட்டசபையில் பேசினால் சபை காவலர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள்.
அவங்க மட்டும் செய்யலாம்
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச சட்டசபையில் அனுமதிப்பது கிடையாது. புதுச்சேரி சட்டசபையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சினை பற்றி பேசலாம். இதையே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டு முடக்கலாம். ஆனால் தமிழக சட்டசபையில் பேசினால் வெளியேற்றுகிறார்கள். அதனால் தேமுதிக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்துள்ளனர். தங்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலையை அதிமுக உருவாக்கி உள்ளது.
ஓட்டு வங்கி எங்களிடம்தான்
எங்கள் ஓட்டு வங்கி எங்களிடம் தான் உள்ளது. புதிதாக வெளியிட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேமுதிக தொண்டர்கள் வீடு வீடாக சென்று சரிபார்ப்பார்கள்.
முல்லைவேந்தனைப் போல மேலும் வருவர்
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து விலகி தேமுதிகவில் சேர்ந்துள்ளார். இதுபோல இன்னும் பலர் சேர பேசி வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி மரியாதை நிமித்தமாக விஜயகாந்தை சந்தித்துள்ளார். பல விஷயங்கள் பற்றி பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார்.
பாஜக உறவு குறித்துப் பேச விரும்பவில்லை
இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கையை அங்குள்ள ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. பாஜக அதிமுகவுடன் ரகசிய உறவுகொண்டிருக்கிறதா? என்பதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
சொந்தக் காலில் நிற்கிறோம்
தேமுதிகவை பொறுத்தவரை நாங்கள் எங்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் எங்கள் கட்சி தொண்டர்களை நம்பியுள்ளோம். தமிழகத்தில் தனித்து நிற்கலாம் என்ற பார்முலாவை உருவாக்கியதே விஜயகாந்த் தான். எனவே நாங்கள் என்றும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது கிடையாது என்றார் பிரேமலதா.