விஜயகாந்த் நலம் பெற பிரார்த்தனை.. திருப்பாற்கடல் பெருமாள் கோயிலில் பிரேமலதா சாமி தரிசனம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
காவேரிப்பாக்கம்: விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கேடச பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் தெய்தார்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 107-ஆவது திவ்ய தேசமாக திகழ்கிறது.
இங்கு நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
விஜயகாந்த் கடந்த 2 நாள்களுக்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.