பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அணி முடிவு
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என ஓபிஎஸ் அணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துவை ஆதரிப்பது என ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு அளிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்காக இன்று மாலை அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அம்மா அணி ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் அணி கூட்டம்
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை முடிவு செய்ய சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ராஜ்யசபா எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியின் அனைத்து முக்கிய நிர்வாகிகள் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ராம்நாத்திற்கு ஆதரவு
இந்தக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்துவை ஆதரிப்பது என ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர். இதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி வருகிறது.
அதிகரிக்கும் பலம்
அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த 12 எம்பிக்களும், 12 எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் தற்போது உள்ளனர். அவர்களின் ஆதரவு தற்போது ராம் நாத் கோவிந்துக்கு செல்கிறது. அதிமுகவில் மொத்தமாக 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி, ராம்நாத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிக் கூட்டம்
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. வரும் ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.