நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார்... ஈபிஎஸ் ஏன் எதிர்க்கவில்லை- பிரின்ஸ் கஜேந்திரபாபு
நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களை அரசு வஞ்சித்து விட்டதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் மூடி மவுனம் சாதிப்பதாக
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியிட்டது.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்தது.
மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை இருக்கக்கூடாது. உள் ஒதுக்கீடு இன்றி, ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையிலேயே சேர்க்கை நடத்த வேண்டும். புதிய தர வரிசைப் பட்டியலைத் தயார்செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, 'உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் வாய் மூடி மவுனம் சாதிப்பதாக பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களை அரசு வஞ்சித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் கவனத்தை ஈர்க்க மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்த தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பேசவில்லை என்று கேட்ட அவர், ஜெயலலிதாவின் போராட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்படும். தேவைப்பட்டால், அதற்காகத் தனிச் சட்டம் இயற்றுவேன் என ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் அதை நிறைவேற்ற இன்றைய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். நீட் தேர்வினால்,
உரிய கட் ஆப் மதிப்பெண்கள் வைத்திருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்காது என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.