தனியாருக்கு அனுமதி… போர்க்கொடி தூக்கிய அரசு பஸ் ஊழியர்கள்
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்குள் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்டதற்கு அரசு பேருந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி: கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்திற்குள் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்துமிடத்தில் மினி பஸ்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதைக் கண்டித்தும், தொடர்ந்து பஸ் நிலையத்திற்குள் அனுமதிக்க கோரியும் மினி பஸ் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவுப்படி மினி பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
இந்நிலையில், மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து மாலை திடீரென அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பஸ் நிலையத்தை புறக்கணித்து மெயின் ரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றினர். இதனால் பஸ் நிலையத்தில ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
இதையடுத்து, கோவில்பட்டி ஆர்டிஓ தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மினி பஸ்கள் பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அரசு பஸ் ஊழியர்கள் ஏற்று கொண்டனர். இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.