தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து சென்னையில் தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
பருவமழை பொய்த்து போனதால் சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன. போதா குறைக்கு கொளுத்தும் வெயிலால் ஏரிகள் மற்றும் கோயில் குளங்களில் இருந்த தண்ணீரும் சட்டென வற்றி போனது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின்றி தவிக்கும் மக்களுக்கு தனியார் குடிநீர் கேன்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.
இன்று முதல் வேலைநிறுத்தம்
இந்நிலையில் தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் தொடர்பாக குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு
குடிநீர் கேன்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெறக்கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்
வேலை நிறுத்தத்தால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பதாடு ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கேன்களை வாங்கும் மக்கள்
வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் முன்கூட்டியே குடிநீர் கேன்களை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தம் இயல்பு வாழ்க்கையில் பிரதிபலிப்பதற்குள் அதனை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.