டாஸ்மாக் எதிர்ப்பு பந்த்.. பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன.. ஓரிரு இடங்களைத் தவிர
சேலம்: காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், பள்ளிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மது விலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சில கட்சிகள் பந்த் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் கூறுகையில், மதுவுக்கு எதிராக போராடி மறைந்த காந்தியவாதி சசிபெருமாள் சுதந்திர இந்தியா என்ற பெயரில் பள்ளி நடத்தி வந்தார். தனியார் பள்ளிகளுக்கான சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். அவரது கொள்கை அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடைகள் இருப்பதால் மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளனர். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தலைநகர் சென்னை உள்பட எங்குமே விடுமுறை விடப்பட்டதாக தெரியவில்லை. சசி பெருமாளின் சொந்த ஊரான சேலத்தில் மட்டும் சில பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.