கட்டுக்கடங்காத கூட்டம்.. ராமேஸ்வரத்திற்குள் தனியார் வாகனங்கள் நுழைய அனுமதி மறுப்பு
ராமேஸ்வரம்: கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, ராமேஸ்வரத்திற்குள் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அப்துல் கலாமின் இறுதி சடங்கு, அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அஞ்சலியில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரம் நோக்கி சாரை சாரையாக வந்தனர். நேற்று முதலே மக்கள் கூட்டத்தால் ராமேஸ்வரம் நகரம் திக்குமுக்காடியது.
பஸ், ரயில் போன்ற பொது வாகனங்கள் மட்டுமின்றி, சொந்த கார்கள், வாடகை வாகனங்களிலும் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தோடு சேர்த்து வாகன கூட்டமும் ராமேஸ்வரம் நகரை திணறடித்தது.
கலாமின் உடல் அடக்கம் நடைபெற்ற இன்றைய தினம், மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ராமேஸ்வரம் நோக்கி அணிவகுத்தன. நகருக்குள் வாகனங்களை அனுப்பினால் சிக்கல் என்பதை உணர்ந்த போலீசார், மண்டபம், ராமநாதபுரம் போன்ற நகரங்களிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, வாகனங்களில் வந்தவர்கள் பஸ்களிலும், ரயில்கள் மூலமாகவும், ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.