சொல்லாததை சொன்னதாக எழுதுவதா.. கருணாநிதி மீது அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார்
சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மீது வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்துள்ளார்.
சட்டசபை என்பது அதிகாரம்மிக்கது. எனவே சட்டசபையையோ அல்லது, அதன் உறுப்பினர்களையோ, ஆதாரமின்றி, அவதூறு செய்யும் வகையில் யாராவது பேசினாலோ, எழுதினாலோ, வேறு எந்த வகையிலாவது கருத்துக்களை வெளிப்படுத்தினாலோ அது உரிமைமீறல் பிரச்சினை என்று அழைக்கப்படும்.
உரிமை மீறல் நடந்துள்ளது என்று ஆளும் அல்லது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டுவர முடியும். இதன்பிறகு உரிமை மீறல் குழு, ஆதாரங்களை அலசி ஆய்வு செய்து குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அதை சபாநாயகரிடம் தெரிவிக்கும்.
உரிமைமீறலுக்கு உள்ளானவரை சபாநாயகர் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்துவிட்டுவிடலாம் அல்லது, நேரில் வரவழைத்து, அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க முடியும். அப்போது சபாநாயகர் நீதிபதிக்குறிய அதிகாரத்தோடு விளங்குவார். அவரது தீர்ப்பை ஏற்க வேண்டியது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு கட்டாயமாகும்.
இந்நிலையில்தான், வேளாண்துறை அமைச்சர் வைத்திலிங்கம், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக சட்டசபையில் இன்று உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார். சட்டசபையில் தான் பேசாத ஒரு விஷயத்தை, நான் பேசியதாக முரசொலி பத்திரிகையில் கருணாநிதி எழுதியுள்ளார்.
கருணாநிதியின் செயல் உரிமை மீறலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், அதை ஆய்வு செய்ய உரிமைமீறல் குழுவிற்கு அனுப்பி வைத்தார். உரிமை மீறல் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு கருணாநிதி மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும்.