டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு, எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் கண்டனம்
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலூர் எம்.பி அருண் மொழித் தேவன், அரக்கோணம் எம்.பி கோ.அரி மற்றும் காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சில தினங்கள் முன்பு பேசினர்.
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - சசிகலா இணைந்தே குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தம்பிதுரை கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முன்னிருந்து செயல்பட்ட தம்பிதுரை தற்போது அவருக்கு ஆதரவாக பேசுவது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினர்.
கண்டிப்பு
இதை கண்டித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பேட்டியளித்தார். இந்த நிலையில், இன்று முருகுமாறன் உள்ளிட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் இன்று நிருபர்களை சந்தித்தனர்.
தம்பிதுரை பேட்டி
அவர்கள் கூறியது: பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்கும் முடிவை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கேட்டுதான் பெற்றீர்களா என முதல்வரிடம் நிருபர்கள் கேட்டபோது தம்பிதுரை திடீரென கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஆனால் இரு நாட்கள் பிறகு ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என தம்பிதுரை தெரிவித்தார்.
நா அடக்கம் தேவை
இதை நான் இரட்டை நிலைப்பாடு என கண்டித்தேன். என்ன இருந்தாலும் நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆனால், எம்எல்ஏ வெற்றிவேல், வார்த்தைகளை உமிழ்கிறார். யாராக இருந்தாலும் நா அடக்கத்தோடு பேச வேண்டும். ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க வேண்டிவரும். நாங்கள் கூறும் கருத்திலுள்ள உண்மைகளை ஆராய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசுவதை தவிர்க்க வேண்டும்.
புறம் தள்ளாதீர்
தவறு யார் செய்தாலும், அழைத்து அறிவுரை வழங்கி வழிநடத்துவதுதான் அதிமுக இயக்க தலைமையின் வழக்கம். ஆனால் வெற்றிவேல் எங்களுக்கு கழக விதிமுறை தெரியாது என்கிறார். முருகுமாறனும் வழக்கறிஞர், அருண்மொழி தேவனும் வழக்கறிஞர். எங்களை போன்ற உண்மை விசுவாசிகளை அவர்கள் புறம் தள்ளுகிறார்கள்.
டிடிவி தினகரனுக்குதான் எதிர்ப்பு
கட்சி பொதுச்செயலாளர் சசிகலாதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது வாரிசு அரசியல். இதை ஜெயலலிதா விரும்பியிருக்க மாட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.