தஞ்சாவூரில் மீண்டும் களமிறங்கிய ரெங்கசாமி.... அதிருப்திகளை மீறி கரைசேருவாரா?
சென்னை: தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. கடந்த 5 ஆண்டுகாலம் தாம் கொண்டு வந்த நலத்திட்டங்கள் கை கொடுக்கும் என நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறார்.
தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. ரெங்கசாமி (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் 52 வார்டுகள், வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூர் ஒன்றியத்தின் ஒரு பகுதியான புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய 9 ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதியில் கள்ளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், நாயக்கர், மராத்தியர், சௌராஸ்டிரா, யாதவர், பிராமணர், நாடார், வெள்ளாளர், அகமுடையார், தலித் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
பாலங்கள்
தஞ்சாவூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 1,880 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர, மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக,பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் பாலம், சீனிவாசபுரம், மேல அலங்கம், கொடிமரத்து மூலை, தெற்கு அலங்கம் உள்பட 11 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்காளர்களுக்கு பணம்
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தஞ்சாவூருக்கு ஒதுக்கப்பட்ட நலத் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்தார் ரெங்கசாமி. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதனையுமே நிறைவேற்ற காரணத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்; இதைசரிகட்டவே பணத்தை வாரி இறைத்தார் எனவும் கூறப்படுகிறது.
நிறைவேறாத கோரிக்கைகள்
பொதுமக்களிடத்தில் மட்டுமல்ல அதிமுக தொண்டர்களும் ரெங்கசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. தஞ்சாவூர் - சென்னை இடையே முன்பு ஓடி, பின்னர் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். தஞ்சை - திருச்சி இரண்டாவது ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாற்று வழி காண வேண்டும். வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண வேண்டும். அடிக்கடி தீப்பற்றி எரியும் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி திறந்தவெளி குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வேண்டும். மேரீஸ் கார்னர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்கின்றனர் தஞ்சை வாக்காளர்கள்.
கட்சியிலும் பொதுமக்களிடத்திலும் இருக்கும் இத்தனை அதிருப்திகளையும் தாண்டி ரெங்கசாமி கரைசேருவாரா?