சேலம் கோவில் பிரச்சினை: கிராம மக்கள் உண்ணாவிரதம் – வட்டாட்சியர்கள் சிறைபிடிப்பு
சேலம்: சேலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 21 கிராமங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களிடையே சமாதானம் பேசச்சென்ற வட்டாச்சியர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வேடுகாத்தான்பட்டியை அடுத்த திருமலைகிரியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி சைலாம்பிகை, சைலகிரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பித்து அதற்கான திருப்பணிகளை நடத்தினர். திருப்பணிகள் முடிந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், அதேபகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தினர் கோவிலில் சாமி கும்பிடும் உரிமை தங்களுக்கும் உள்ளது என்று பிரச்சினையை கிளப்பினார்கள். இதுதொடர்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனையடுத்து கடந்த 2ஆம் தேதியே கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம் நடத்தினர். இதையறிந்த மற்றொரு தரப்பினர் சேலம்-இளம்பிள்ளை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒருதரப்பினர், ‘கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம்' என்றனர். மற்றொரு தரப்பினர், ‘இன்றே கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் உரிமை எங்களுக்கு வேண்டும். இல்லையேல் கோவில் நோக்கி ஊர்வலமாக செல்வோம்' என்றனர். இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.
144 தடையுத்தரவு
இதனையடுத்து உருவான பதற்றம் காரணமாக திருமலைகிரி, வேடுகாத்தான்பட்டியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவாகலாம் என்பதால் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பரிந்துரையின் பேரில் உதவி கலெக்டர் 2-ந்தேதி நள்ளிரவு முதல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
கும்பாபிஷேகம் நிறுத்தம்
இரவோடு இரவாக கோவில் கதவு பூட்டப்பட்டு, 144 தடை உத்தரவு நோட்டீசு ஒட்டப்பட்டது. இன்று (புதன்கிழமை) நடைபெற இருந்த கும்பாபிஷேகமும் நிறுத்தப்பட்டது. யாகசாலை வெறிச்சோடி கிடந்தது. பூஜைக்கான பொருட்கள் ஆங்காங்கே வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
கோவிலில் தஞ்சம்
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேறி, சித்தர்கோவிலில் தஞ்சம் அடைந்தனர். கோவிலை திறந்து கும்பாபிஷேகம் நடத்தும்வரை திரும்பமாட்டோம் என்று கூறினர்.
போலீஸ் குவிப்பு
இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். சுமார் 1,000 போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் ‘வஜ்ரா' வாகனமும் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
வட்டாச்சியர் சிறைபிடிப்பு
இந்நிலையில் சித்தர் கோவில் மலையில் தஞ்சம் அடைந்து போராட்டம் நடத்தும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 வட்டாட்சியர்கள் சென்றனர். அவர்களை போராட்டக் குழுவினர் சிறைப்பிடித்து மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழு அமைக்க முடிவு
இதனை அடுத்து காவல் துறையினர் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியர்களை மீட்டனர்.மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, கோயில் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.