பீப் 'சாங்': சிம்பு, அனிருத்துக்கு எதிராக பெண்கள் கோவையில் போராட்டம் - புகைப்படங்களூக்கு செருப்படி!!
கோயம்புத்தூர்: மிக வக்கிரமான பாடலை பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக கோவையில் பெண்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அப்போது சிம்பு, அனிருத் புகைப்படங்களை பெண்கள் கிழித்தெறிந்தனர்.
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் அச்சில் ஏற்ற முடியாத கொச்சை வார்த்தைகளுடன் சிம்பு பாடல் பாடியுள்ளார்.
அந்த வார்த்தைகளை பீப் ஒலி கொடுத்து மறைக்க முயற்சிப்பது போல பாவனை செய்துள்ளனர். அதனால் சிம்பு குறிப்பிடும் அந்த கெட்டவார்த்தை கேட்கவே செய்கிறது.
சிம்பு, அனிருத்தின் இந்த வக்கிரத்தனம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் சிம்பு, அனிருத் இருவரும் காய்ச்சி எடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கோவை காவல்துறையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிம்பு, அனிருத் மீது புகார் கொடுத்தனர். அதில், பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதுமாக போக்குக்கு தூபம் போடுவது போல் இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, சிம்பு மற்றும் அனிருத் படங்களை கிழித்து செருப்படி கொடுத்து தங்களது எதிர்ப்பை ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.