திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக சாலை மறியல்... பொதுமக்கள் கைது- வீடியோ
பெருமாநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சுற்றியுள்ள அய்யம்பாளையம், கொங்குபாளையம், ஈட்டிவீரான்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய ஊர்களில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
Recommended Video
இந்த ஊர்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமாநல்லூர்- கோவை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என பொதுமக்கள் கூறினர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஒரேநாளில் 3321 கடைகள் மூடப்பட்டன. அதனையடுத்து கிராமங்களிலும் சிறு ஊர்களிலும் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறக்க முற்படும்போது ஆங்காங்கே போராட்டம் வெடிக்கிறது.