டாக்டர்கள் மீது தாக்குதல்.. பாரிமுனையில் அரசு டாக்டர்கள் மறியல்.. நோயாளிகள் அவதி!
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரில் படித்து வருகிறார். கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கல்லூரி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மாணவரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே மாணவர் விஜய்க்கு முறையாக சிகிச்சை தரவில்லை என கூறி ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 500க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்ட்ரல் - பாரிமுனை இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரமாக பதட்டம் நிலவியது. இதையடுத்து இருதரப்பினரிடமும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.