சென்னையில் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக, மே 17 இயக்கத்தினர் கைது
சென்னை: சென்னை அடையாறில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைன் கடந்த 6 ஆம் தேதி இலங்கைக்கு சென்றார். அப்போது அந்நாட்டு அதிபர் சிறிசேன, பிரதர் ரணில் விக்ரமசிங்கே, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து அங்கு நடந்த இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்தினை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், இதனை கண்டிக்கும் வகையில் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
போராட்டத்தில் அல்-ஹூசைனை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. மேலும் அவர்கள், அல்-ஹூசைன் உருவப்படத்தை எரித்தும் செறுப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.