இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.. இளையராஜா வீடு நாளை முற்றுகை: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை: இலங்கையில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. போராட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் ஜூலை மாதம் யாழிலும், கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார்.
நாளை போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் 14 .05 .2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.
உலகை ஏமாற்ற நிகழ்ச்சி
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது. இந் நிகழ்வில் இளையராஜா பங்கு பற்றக்கூடாது என முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
போராட்டங்கள் தொடர்கதை
தமிழீழத்தில் இலங்கை ராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை (நிலங்களை) விடுவிக்கக் கோரி இரவு பகலாக பெண்கள் சிறுவர்கள் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறக்கணியுங்கள்
இந்த நிலையில் அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்வு நடத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும் எனவே உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.