முதல்வர் உறுதியளித்தாலும் போராட்டத்தை கைவிட முடியாது.. நெடுவாசல் மக்கள் அதிரடி!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என்று புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் வெறும் வாய்மொழி உத்தரவுகளை நம்ப மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 14 நாள்களாகவும், கோட்டைக்காட்டில் 4 நாள்களாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்தனர். அப்போது அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறிய போராட்டக்குழுவினர் இதை ஏற்பதாக தெரிவித்தனர்.
போராட்டக் குழுவினரின் பேச்சுவார்த்தை குறித்து நெடுவாசல் மக்கள் கூறுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரை நாங்கள் போராடுவோம். எங்கள் மண்ணை காக்க உயிரையும் கொடுப்போம். வெறும் வாய்மொழியாக பிறப்பிக்கும் உத்தரவுகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை.
இந்த திட்டத்தை செயல்படுத்தியது மத்திய அரசுதான், இதில் மாநில அரசுக்கு சம்பந்தமில்லை. எனவே மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்வதாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில அரசு கோர வேண்டும். மேலும் 6 ஆழ்துளைக் குழாய்களை மூட வேண்டும். எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசினஅ நிலைப்பாடு வரவேற்பளிக்கிறது என்றனர்.