பொதுமக்கள் ஆத்திரம்.. 12 மதுக்கடைகள் சூறை, தீவைப்பு... கடலூர், புதுச்சேரியில் பதற்றம்
புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே 12 மதுக்கடைகள் பொதுமக்களால் சூறையாடப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: பாகூர் அருகே மூடப்பட்டு இருந்த மதுக்கடைளை அடித்து நொறுக்கி, பார் கொட்டகைக்குத் தீ வைத்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ளது சோரியாங்குப்பம் கிராமம். கடலூர் நகரை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. கடலூர் சாவடியில் இருந்து சோரியாங்குப்பம் வருவதற்கு பெண்ணை ஆற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சோரியாங்குப்பத்தில் 10 மதுபான கடைகள், 2 சாராய கடைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் இருந்து குடிமகன்கள் பெருமளவில் இங்கு வந்து மது குடிப்பது வழக்கம். இந்த மதுக்கடைகளுக்கு வருபவர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.
மாணவர்களுக்கு அச்சுறுத்தல்
குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தன என்று தொடர் புகார்கள் எழுந்தன.எனவே இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.
புதியதாக 15 மதுபானக்கடைகள்
பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அரசு மேலும் 15 கடைகளுக்கு அனுமதியளித்தது. இதற்கு சோரியாங்குப்பம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாக மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்க கூடாது. ஏற்கனவே உள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வந்தனர்.
பெண்கள் சாலைமறியல்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக இன்று காலை ஏராளமான பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் மதுக்கடைகள் அடைப்பு
பொதுமக்கள் போராட்டத்தால் சோரியாங்குப்பத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஒரே ஒரு சாராய கடை மட்டும் திறந்து இருந்தது.
சாராய கடை சூறை
திறந்து இருந்த சாராய கடைக்கு திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்த சாராய பாட்டில்கள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். சாராய கடை சூறையாடப்பட்டது.
திறந்து இருந்த சாராய கடைக்கு திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்த சாராய பாட்டில்கள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். சாராய கடை சூறையாடப்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.
பலர் படுகாயம்
எனவே, மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தடியடி நடத்தியதில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்தனர்.தடியடி நடத்தினாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பொதுமக்கள் மேலும் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
மதுபானக்கடை சூறை தீவைப்பு
பின்னர் அவர்கள் திடீரென எழுந்து மீண்டும் மதுக்கடைகளை நோக்கி சென்றார்கள். அங்கு ஏற்கனவே மூடப்பட்டு இருந்த 11 மதுக்கடைகளை அடித்து நொறுக்கினார்கள். 2 மதுக்கடை பார் கொட்டகைகளுக்கு தீ வைத்தனர். அவை எரிந்து சாம்பலாயின.
இதனால் அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.