சசிகலாவை ஆதரிக்காதீங்க.. மன்னார்குடி பிடியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மக்கள் அதிரடி எஸ்எம்எஸ்!
சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் எம்எல்ஏக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் எம்எல்ஏக்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கும் இடையே முதல்வர் பதவிக்கான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள், திரைதுறையினர், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைத்து தரப்பினரும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பதவியில் உள்ள 5 எம்எல்ஏக்களும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் எஞ்சியுள்ள எம்எல்ஏக்களையாவது தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் சசி தரப்பு அவர்களை சிறைபிடித்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளது.
ஜெயலலிதா உயிரிழந்து 2 மாத்திலேயே சசிகலா முதல்வர் இருக்கைக்கு மல்லுக்கட்டுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன்னார்குடி கோஷ்டியின் பிடியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு அவரவர் தொகுதி மக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தரவேண்டாம் எனக்கூறி குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து போன் செய்தும் வருகின்றனர். தொகுதி மக்கள் நெருக்கடி கொடுத்து வருவதால் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் திணறி வருகின்றனர். மக்கள் எதிர்ப்பை மீறி சசிகலாவுக்கு எப்படி ஆதரவு தருவது என்றும் அவர்கள் யோசித்து வருகின்றனர்.