கதை வசனம் ஓபிஎஸ்தான்... ஆனால் திரைக்கதை, இயக்கம் மோடி? #OPS
சென்னை: சரியோ தவறோ... இன்று மக்கள் மனதின் எடைப் பார்க்குமிடம் சமூக வலைத்தளங்கள்தான். முதல்வர் பன்னீர் செல்வத்தின் அதிரடிப் பேட்டிதான் இன்று இரவு முழுக்க பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கூடவே அந்தப் பேட்டி குறித்த மக்கள் ரியாக்ஷன்களும்.
முதல்வர் பன்னீர் செல்வத்தையும் இன்றைய அரசியல் சூழலையும் மேம்போக்காகப் பார்த்துக் கொண்டிருக்கும் பலரும் பன்னீர் செல்வத்தின் துணிச்சல், அவர் பட்ட மனக் கஷ்டங்களைப் பார்த்து கண்கலங்கி, ISupportOPS என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓரளவு விஷயமறிந்தவர்கள், இதில் மோடி மற்றும் திமுகவின் பின்னணி இருக்குமோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் விஷயமறிந்த அத்தனைப் பேரும் ஒருமித்த குரலில் இது தனித்துவமிக்க தமிழகத்தை காவிமயமாக்க சங்க பரிவாரங்களும் பிரதமர் மோடியும் செய்த வேலை என்று ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பேட்டியின் ஆரம்பத்தில் எந்த அளவுக்கு பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு இருந்ததோ, அதற்கு நிகரான சந்தேகங்களும் எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன.
அப்படி எழுந்துள்ள சில சந்தேகங்கள், எதிர்ப்புகள்...
பாட்ஷா கதைதான்...
"பாட்ஷா பாயாக மாறிய பன்னீரின் கதை, வசனமெல்லாம் ஓகே... ஆனால் திரைக்கதை எழுதி இயக்கியவர் மோடி என்கின்றன அதிகாரப்பூர்வ தகவல்கள்... இது பாட்ஷாவை ஆன்டனியாகக்கூட அல்ல... 'கேசவனாக' மாற்றிவிடும் துர்ப்பாக்கியம் (கேசவன் என்ற பாத்திரம் பாட்ஷாவில் துரோகியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்).
ஏற்கெனவே தமிழகத்தில் அரசியல் சாசன மரபு மற்றும் சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் அவரது ஏஜென்ட் வித்யாசாகர் ராவும். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான மத்திய அரசின் ஏஜென்ட், ஆளுநராக இருந்ததில்லை!
முதல்வராக சசிகலா வரக்கூடாது. ஆனால் அதைவிட ஆபத்து மோடி ஏஜென்ட்களின் ஆட்சி.. ஸ்லோ பாய்சன்!
பன்னீர் செல்வம் சுய சிந்தனை, உண்மையான அதிமுக எம்எல்ஏக்கள், தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.
ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா என்ன!"
பள்ளி விடுமுறையா...
"நாளைக்கு விடுமுறையான்னு பசங்க கேட்கறாங்க..!!
அவங்கவங்க கவல அவங்களுக்கு."
"ஆமா... இன்னிக்கு போலீஸுக்கு இன்சார்ஜ் யாரு... பயமா இருக்கே!"
ஒரே செல்வம்...
"பொருளாளர் பதவி போனா என்ன... அடிமை விலங்கை உடைத்த நீங்களே எம் முதல்வர்."
"ஜெயலலிதா சம்பாதித்த ஒரே செல்வம். பன்னீர்செல்வம்."
"உங்கள நம்பிதான் நான் தூங்கபோறேன்.... காலைல பல்டி அடிச்சுராதீங்க..."
பன்னீர் செல்வத்தை இயக்குவது மோடி...
"சசிகலா முதல்வர் ஆக பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்று பேசி வருபவர் தம்பிதுரை. பன்னீர் செல்வம் மோடியை சந்திக்கிறார். ஆனால் தம்பிதுரையை உடன் அழைத்து செல்லவில்லை.
தம்பிதுரை தனியாக மோடியை சந்திக்க அனுமதி கேட்கிறார் ஆனால் தம்பிதுரையால் மோடியை சந்திக்க முடியவில்லை, எனவே தம்பிதுரை மோடிக்கு எதிராக கடுமையாக பேட்டி கொடுக்கிறார்.
இது சசிகலாவை ஆதரிப்பவர்கள் பன்னீர் செல்வத்தை ஏற்கவில்லை என்பதையும். பன்னீர் செல்வத்தை ஏற்காதவர்களை மோடி சந்திக்க மறுக்கிறார் என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
இதே போல் தமிழக பாஜக பிரமுகர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவி ஏற்க போவதாக அறிவிப்பு வருகிறது. அனால் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பாஜக கவர்னர் தமிழகத்திற்கு வராமல் தவிர்க்கிறார். சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாமதிக்கிறார். இதே சூழ்நிலையில் இத்தனை நாள் விசாரணையே இல்லாமல் இருந்த சொத்து குவிப்பு வழக்கு அடுத்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதையெல்லாம் கவனிக்கும்போது தமிழகத்தில் எந்த காலத்திலும் வரமுடியாது என்று அறிந்துகொண்ட பாஜக தனது நிழல் அரசாங்கத்தை பன்னீர் செல்வம் மூலம் நடத்த முயல்கிறது என்பது உறுதியாகிறது..
பன்னீர் எதிர் பேட்டியை தொடங்கி வைக்கிறார்....
ஊடகங்களும் சசி எதிர்ப்பு பேட்டிகளை போயஸ் இல்ல வாசலிலும் கண்டு போடுகின்றன.."
-பன்னீர் செல்வம் பேட்டி ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகள் இவை.
இரவு விடிவதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்களோ...!