தொடர்ந்து குறைந்த அழுத்த மின்சாரம்.. மின்வாரிய அலுவலகம் முற்றுகை!
நெல்லை அருகே குறைந்த அழுத்த மின்சாரம் தொடர்ந்து வந்ததால் பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை: குறைந்த அழுத்த மின்சாரம் தொடர்ந்து வந்ததால் பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ளது கட்டபுளி கிராமம். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலைியல் மாலை 6.30 மணி அளவில் பெண்கள் திடீரென மானூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள எஸ்எஸ் 2 மின் மாற்றியை ஒரு மாதத்திற்கு முன்பு மின் வாரிய ஊழியர்கள் அகற்றினர். அப்போது வேறு ஒரு மின் மாற்றி பொருத்தப்படும் என அறிவித்தனர்.
ஆனால் இதுவரை மின் மாற்றி பொருத்தவில்லை. அருகில் உள்ள மற்ற கிராமத்தில் இருந்து இங்கு மின் வினியோகம் செய்கின்றனர். இதனால் வீடுகளில் மின்சார விளக்குகள் சரிவர எரியவதில்லை.
குறைந்த மின்சாரத்தில் இயங்கிய டிவி, மிக்சி, கிரைண்டர் போன்றவை எரிந்து நாசமாகி வி்ட்டது. இதுகுறித்து மின் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் இரவில் இருண்டே கிடக்கிறது. மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல அவதிப்பட்டு வருகின்றனர். ஊரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இவை அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை என்று காட்டமாக தெரிவித்தனர்.