குண்டும் குழியுமாக இருந்த வானகரம்- கோயம்பேடு சாலையை களத்தில் இறங்கி சரிசெய்த பொதுமக்கள்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. வானகரம்- கோயம்பேடு சாலையில் மழைநீர் தேங்கி சாலைகள் மிகவும் மோசமானதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதநையடுத்து, லாரி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் பொது நல சங்கத்தினர் இனைந்து கட்டிட இடிபாடுகள், செங்கல், ஜல்லிகள், மண் உள்ளிட்டவற்றை சாலையில் உள்ள பள்ளத்தில் கொட்டி பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது,
‘‘பழுதடைந்த இந்த சாலையை 3 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீரமைக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்து எங்களை கைது செய்தனர். மழை நிதர பிறகும் பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே பழுதடைந்த வானகரம்-கோயம்பேடு சாலையை நாங்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்'' என்றனர்.