தேசிய கீதம் பாடிய போது நாராயணசாமியுடன் செல்பி எடுத்ததால் வழக்கு... காங். பிரமுகர் 'எஸ்கேப்'
புதுச்சேரி: தேசிய கீதம் இசைத்த போது புதுவை முதல்வர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்த காங்கிரஸ் பிரமுகர் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரகுமான் தலைமறைவாகிவிட்டார்.
புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கீதம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மாணவிகளுடன் சேர்ந்து தேசிய கீதம் பாடினார்.
அப்போது உருளையன்பேட்டை தொகுதி காங்கிரஸ் தலைவர் ரகுமான், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருடன் செல்ஃபி எடுத்தார். அவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனால் தேசிய கீதத்தை அவமதித்ததாக ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவின் கீழ் ரகுமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து ரகுமான் தலைமறைவாகிவிட்டார். அவரை புதுவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.