சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக புதுவை அதிமுக கடும் எதிர்ப்பு.. ஓம்சக்தி சேகர் போர்க்கொடி
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக புதுவை அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுச்சேரி: சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்க புதுவை அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மாதான் என்று முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் போர்க் கொடி தூக்கியுள்ளார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து முழங்கி வந்த நிலையில், உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதனால் அதிமுகவில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. மேலும், யார் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுந்து தமிழகத்தில் விவாதம் நடந்து வருகிறது.
ஆனால், அதிமுக வட்டாரத்தில் அடுத்து அதிகாரத்திற்கு யார் வருவது என்பது குறித்து சண்டையே நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக கூடவே இருந்த சகிகலா நடராஜன்தான் அடுத்த பொதுச்செயலாளர் என்று அதிமுகவின் ஒரு பிரிவினர் பேசி வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவிற்கு எதிராகவும் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக அதிகாரத்திற்கான சதுரங்க வேட்டை நடந்து வரும் வேளையில் புதுச்சேரியில் இருந்து சசிகலா நடராஜன் பொதுச் செயலாளராக நியமிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று புதுவையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், "அம்மாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அம்மாவிட்டுச் சென்ற இடம் காலியாகவே இருக்க வேண்டும். அந்த இடத்திற்கு யாரையும் நியமிக்கக் கூடாது. அதுபோன்று புதுவையில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். புதுவை அரசு இதனை செய்யவில்லை என்றால் அதிமுகவே மணிமண்டபம் கட்டும்" என்று கூறினார்.