புதுச்சேரி ஆசிரம பெண்கள் சாவிற்கு காவல்துறையும் காரணம் – அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி ஆசிரம பெண்கள் சாவுக்கு புதுவை காவல் துறையும் காரணம் என்று புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "புதுவை ஆசிரமத்தில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் அங்கு தங்குவதற்கு ஈடாக தங்களது சொத்துக்களையோ அதற்கு ஈடாக தொகையையோ கொடுத்துவிட்டு தங்கியிருந்ததாக தெரிகிறது.
அவர்களை ஆசிரமத்தில் அங்குள்ளவர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததின் விளைவாக அவர்களை உடனடியாக வெளியேற ஆசிரமம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் அதையேற்க மறுத்து கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். கோர்ட்டில் 6 மாத கெடுவுக்குள் வெளியேற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதை ஏற்க மறுத்த அக்குடும்பத்தினர் மாடியில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
காவல்துறையினர் அவர்களை மீட்டு சமாதானம் செய்துள்ளனர். இதற்கிடையே அந்த குடும்பத்தினர் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் அம்முயற்சியில் 3 பெண்கள் இறந்துள்ளனர். 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தது மட்டும் இல்லாமல் அவர்கள் மனோநிலை அறிந்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தால் இந்த சோக முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள்.
எந்த பிரச்சினைகளையும் புதுவை காவல்துறை சீரிசாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதில் விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது.
இதற்கு ஓரே காரணம் தமிழகத்தில் மகளிர் போலீஸ் நிலையங்கள் ஆங்காங்கே சிறப்பாக செயல்படுவதை போல் புதுவை காவல்துறையும் மகளிர் காவல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காததே இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாகிறது. இந்த புதுவை அரசு பெண்களை பாதுகாக்க தவறியது கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளார்.