பட்ஜெட் கொடுத்த ரங்கசாமி.. பதிலுக்கு அல்வா கொடுத்த அதிமுக.. இது புதுச்சேரி கலாட்டா!
புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது முறையாக முதல்வர் ரங்கசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் ரங்கசாமியின் பட்ஜெட்டுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் அல்வா கொடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் அஜய்குமார்சிங் உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக கவர்னர் உரையை தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுதான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்.
ஆனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்காக புதுவை சட்டசபை இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் நிதி பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத செலவினங்களுக்கு ரூபாய் 1483 கோடியே 33 லட்சத்து 79 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் சபாபதி காலவரையறையின்றி சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதையடுத்து ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபையில் இருந்து வெளியே சென்றனர்.
ஆனால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபையில் இருந்து வெளியேறாமல் இருக்கையிலே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 15 நிமிடம் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களிடம் முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் சபாபதி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சட்டசபை கூட்டப்படும் என்றும் அப்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதனை ஏற்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை கைவிட்டு சபையை விட்டு வெளியேறினர். முன்னதாக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10 மணிக்குள் 30 நிமிடத்தில் முடிந்தது.