சாராயக் கடையை அடித்து நொறுக்கி வீராவேசம் காட்டிய பெண்கள் மீது வழக்குப் போட்ட புதுவை போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று சாராயக் கடைக்குள் புகுந்து ஆவேசமாக போராட்டம் நடத்தி கடையை சூறையாடியதற்காக 3 பெண்கள் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதவை மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும், அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை என்றும் இந்த கடையை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
முதல்வர் ரங்கசாமியிடமும் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில் நேற்று சாராயைக் கடை அகற்றும் போராட்டம் நடந்தது.
காலையில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் குவிந்தனர். கடைக்குள் புகுந்து அதிரடியாக அடித்து நொறுக்கினர். சாராய கேன்கள், பாட்டில்கள் உள்ளிட்டவவற்றை தூக்கிப் போட்டு உடைத்தனர். பெண்கள் ஆவேசமாக நடத்திய இந்தப் போராட்டத்தால் குடிக்க வந்த குடிகார்ரகள் மப்பு இறங்கி அங்கிருந்து ஓடி விட்டனர்.
கடையில் வைக்கப்பட்டிருந்த சாராய பாட்டில்களை தூக்கிப்போட்டு பெண்கள் அடித்து நொறுக்கினர். கேனில் இருந்த சாராயத்தை தூக்கி வந்து நடுரோட்டில் கொட்டினர். ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான சாராயத்தை அவர்கள் ரோட்டில் கொட்டி கடையை சூறையாடினர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சாராயக்கடையை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.