மதுக்கடைகள் கொளுத்தப்பட்ட சம்பவம்... 59 பேர் மீது வழக்கு.. கைது நடவடிக்கை ஆரம்பித்த போலீஸ்
புதுச்சேரி மாநிலத்தில் 12 மதுக்கடைகள் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் 59 பேர் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி: கடலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள பகுதி சோரியாங்குப்பம். இது புதுச்சேரி மாநில கிராமம் என்பதால், நிறைய மதுக்கடைகள் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சோரியாங்குப்பத்தில் அருகே அண்மையில் 12 மதுபானக் கடைகள் புதியதாகத் திறக்கப்பட்டன. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கடைகள் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் அங்கு வந்து அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 12 மதுபானக் கடைகளுக்கும், சில சாராயக் கடைகளுக்கும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 பேர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.