புதுச்சேரியில் இன்று 60 ஆவது சுதந்திர தினம் – தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழாவினை ஒட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி புதுவை விடுதலை பெற்றது.
ஆனால் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியே புதுச்சேரியிலும் அரசு சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
நவம்பரில் கொண்டாட்டம்:
நவம்பர் 1 ஆம் தேதி புதுவை சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
60 ஆவது சுதந்திர தினவிழா:
அதன்படி புதுவையின் 60 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாட அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தேசியக் கொடி ஏற்றி மரியாதை:
விழா நடக்கும் கடற்கரை சாலை காந்தி திடலுக்கு முதல்வர் ரங்கசாமி காலை 8.29 மணிக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மின்விளக்கு அலங்காரங்கள்:
சுதந்திர தினத்தையொட்டி புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை மற்றும் தேச தலைவர் சிலைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அரசு அலுவலகங்கள் விடுமுறை:
புதுவை சுதந்திர தினவிழாவையொட்டி புதுவை மாநிலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.