3 சீனியர்கள், கூடவே 3 சீனியர் விசுவாசிகள்- இது புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்ட சபைத் தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதிகூட வழங்கப்படவில்லை. இந்த 6 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் 3 இடங்களில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும், 3 புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர்.
விராலிமலை தொகுதி அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கும், புதுக்கோட்டை தொகுதி வி.ஆர். கார்த்திக் தொண்டைமானுக்கும், திருமயம் தொகுதி மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்துவுக்கும் மீண்டும் கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவர் அதிமுக வேட்பாளரான கார்த்திக்(44). பி.எஸ்.சி படித்துள்ள இவர் திருமணமாகி இரண்டு மகள்களுக்கு தந்தை. முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்த இவர் கடந்த 2012ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவராக பதவி வகித்து வருகிறார்.
விராலிமலை:
விராலிமலை அதிமுக வேட்பாளரான டாக்டர் விஜயபாஸ்கர் 2011 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏவாக ஜெயித்து சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை வகித்தவர். வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதியுடன் 42 வயதினை தொடுகின்ற விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ், பி.எல் முடித்தவர். மனைவி ரம்யா. இரண்டு மகள்கள் உள்ளனர். புதுகை மாவட்டம், ராப்பூசல் இவருடைய சொந்த ஊர். 2001 முதல் 2006 வரை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தார். தற்போது இவரிடம் இருந்த அப்பதவி திருமயம் எம்.எல்.ஏ வைரமுத்துவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி தற்போது திருமயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.கே.வைரமுத்துவின் வசம்தான் உள்ளது. விராச்சிலைக்காரரான வைரமுத்து(62), பியுசி முடித்தவர். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. 1986 முதல் 1991 வரை திருமயம் ஒன்றியக் குழுத் தலைவர். 1989, 1990 மாவட்ட துணைச் செயலர், 2006 முதல் 2009 வரை மாவட்டச் செயலர், தற்போது மீண்டும் மாவட்டச் செயலர், மாநில விவசாய அணி செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.
கந்தர்வகோட்டை (தனி):
கந்தர்வகோட்டை அதிமுக வேட்பாளாராக பா.ஆறுமுகம் என்பவர் இடம் பிடித்துள்ளார். நார்த்தமலையைச் சேர்ந்த ஆறுமுகம் (54) எம்.ஏ படித்துள்ளார். நார்த்தாமலை ஊராட்சித் தலைவராக இருந்தவர். பிறகு அதிமுக சார்பில் 2 முறை மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவெற்றி பெற்றார். தற்போது புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக உள்ளார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அதிமுக வேட்பாளரான ஆர்.ஏ.ரத்தினசபாபதி(61) நெற்குப்பையைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு படித்துள்ளார். 1986 முதல் 1996 வரை அதிமுக மாவட்டப் பொருளாளராக இருந்தார்.தற்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவராக உள்ளார்.
ஆலங்குடி:
ஆலங்குடியில் ஞான.கலைச்செல்வன் (56) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சேந்தன்குடி கிராமத்தினைச் சேர்ந்தவர். எம்.ஏ, எம்.பில் முடித்துள்ளார். தற்போது மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவராகவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் உள்ளார்.