நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து பிப். 3ம் தேதி போராட்டம் – புதுகை விவசாயிகள் முடிவு
புதுக்கோட்டை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்ட நகலை எரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில துணைத் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நடைபெற்ற வேலைகளை குறித்து மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கன், பி.வீராச்சாமி, பி.ராமசாமி, டி.சத்தியமூர்த்தி, எல்.வடிவேல் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினைக் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனைக் கண்டித்தும், சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும் இடதுசாரி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாடுமுழுவதும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.